1992ஆம் ஆண்டில் வெளியான “பேசிக் இன்ஸ்டிங்க்ட்” திரைப்படத்தின் ஒரு சர்ச்சைக்குரிய காட்சியில், தந்திரமாக தனது உள்ளாடை கழற்ற வைக்கப்பட்டதாக ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் சமீபத்தில் கூறியுள்ளார். காவல் துறை விசாரணை ஒன்றின் போது தனது கால்கள் விரிக்க வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அவரது நினைவுக் குறிப்பில், படப்பிடிப்பின் போது தனது வெள்ள நிற உள்ளாடை, வெள்ளை ஒளியைப் பிரதிபலிப்பதாகவும் பார்வையாளர்களுக்குத் தெரியாது என்றும் கூறி நம்பவைக்கப்பட்டு உள்ளாடையை அகற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறுகிறார். ஆனால் பிறகு தான் அவருக்கும் உலகத்துக்கும் அது பொய் என்று தெரிந்தது. இயக்குநர் பால் வெர்ஹோவன் இவரது கூற்றை முற்றிலுமாக மறுத்துள்ளார். அவருக்குத் தெரிந்தே அனைத்தும் நடந்தன என்றும் இப்போது அவர் பொய் கூறுகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நடந்தவற்றை தான் மிகவும் தீவிரமாக எதிர்த்ததாகவும் அந்தச் சம்பவம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாகவும் மட்டும் ஸ்டோன் வலியுறுத்துகிறார். இந்த விரும்பத்தகாத சம்பவத்தைத் தவிர்த்திருக்க முடியாதா? “எளிதாகத் தவிர்த்திருக்கலாம்” என்கிறார், இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சான்றளிக்கப்பட்ட இன்டிமஸி கோஆர்டினேட்டர் (நெருக்க ஒருங்கிணைப்பாளர்) ஆஸ்தா கன்னா.
அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், தோல் நிற உள்ளாடைகளை அவருக்குக் கொடுத்திருப்பேன் என்றும் அவர் கூறுகிறார். 1990 களின் முற்பகுதியில், பேசிக் இன்ஸ்டிங்க்ட் திரைப்படம் படமாக்கப்பட்ட தருணத்தில், பாலியல் காட்சிகளில் கலைஞர்களுக்கு எளிதாகவும் இயல்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும் நெருக்க ஒருங்கிணைப்பாளர்(இன்டிமஸி கோஆர்டினேட்டர்) என்ற பெயரை யாரும் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால் உலகம் முழுவதும் பொழுதுபோக்குத் துறையில் பரவலாக நடந்து வரும் பாலியல் தொந்தரவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய #MeToo இயக்கம், 2017-ல் வேகம் பெற்றதையடுத்து, இது ஒரு தனித் தொழிலாகக் கருதப்படத் தொடங்கியது. 1970களில் நியூயார்க்கில் பாலியல் மற்றும் ஆபாசத் தொழில் குறித்த “த டியூஸ்” என்ற தொடருக்காக, நடிகை எமிலி மீடேவின் வேண்டுகோளின் பேரில் முதல் இன்டிமஸி கோஆர்டினேட்டரை நியமித்ததாக, 2018ஆம் ஆண்டில் HBO அறிவித்தது.